சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபாய் தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் வெகுமதியைப் பெறுவதற்கு சில வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயிர்களை காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் 5 ஆயிரம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதோடு, ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
